பிள்ளையான் போன்ற கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் இது எனது அரசாட்சியில் நிறைவேற்றப்படும் - சஜித் !



மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தலைமையில் களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட , தொகுதி, பிரதேச , கிராமிய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் ,மாவட்ட இளைஞர் அணி , மகளின் அணியுடனான விசேட கலந்துரையாடல் நேற்று ( 15 ) இடம்பெற்றது


களுதாவளை விளையாட்டு மைதானத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்கள் மற்றும் களுதாவளை கிராமிய குழு தலைவர் பார்த்தீபன் வரவேற்று , பின்னர் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்திலும் வழிபாட்டில் ஈடுபட்டனர் , பின் களுவாஞ்சிகுடியில் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது . 

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மயிலத்தமடுமாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கான தீர்வினையும் , அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான தீர்வினையும் , ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும் , அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டுவதோடு , பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்ய வேண்டும் எனவும் , வாகரை இல்மைற் அகழ்வுடன் தொடர்புடைய காணி திருடர்கள் , சட்ட விரோத மண் கடத்தல் கார கும்பல் உட்பட பல கள்வர்கள் , மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் எனவும் இவ்வாறான விசமிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார். 

மேலும் கருத்து தெரிவிக்கையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூடி ஏகமனதாக தீர்மானித்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கருத்து தெரிவித்தார். 

Post a Comment

0 Comments