4 இலட்சம் மக்களை 70 ஆயிரமாகக் காட்டி உணவைத் தடுத்தது போர்க்குற்றம்..! என்கிறார் சுமந்திரன்



முள்ளிவாய்க்காலில் மிகச் சிறிய நிலப்பரப்பில் எமது மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட அந்த இனவழிப்பு நாள்களை நாங்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம்(16.05.2026) பருத்தித்துறை - முனைப் பகுதியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் அஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் 4 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருந்தபோது, வெறும் 70 ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாகக் கூறி உணவைத் தடுத்தது இலங்கை அரசு செய்த பாரிய போர்க்குற்றமாகும். குண்டு வீச்சுகளுக்கு மத்தியிலும் பசி, பட்டினியால் எமது மக்கள் அல்லல்பட்டனர்.

ஓர் அகப்பைக் கஞ்சிக்காக ஏங்கி நின்ற அந்த நாள்களை நினைவுபடுத்தவே 17 ஆண்டுகளுக்குப் பின்பும் இந்த 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' வழங்கும் நிகழ்வை முன்னெடுக்கிறோம். இந்த நினைவேந்தல் இன்றுடன் முடிந்துவிடக் கூடாது.

எமது எதிர்கால சந்ததியினரும் இந்த வரலாற்றைத் தொடர்ந்து நினைவு கூர வேண்டும். இறுதிப் போரின் போது எமது மக்கள் சிறிய கடற்கரைப் பரப்புக்குள் முடக்கப்பட்டிருந்த அவலத்தை நினைவுகூரும் வகையில் பருத்தித்துறை முனையில் இந்த அஞ்சலி நிகழ்வை நடத்துகின்றோம் என்றார்.





Post a Comment

0 Comments