வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய தேசிய கல்லூரியின் 78 ஆவது பாடசாலை தினம்


மட்டக்களப்பு, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய தேசிய கல்லூரியின் 78 ஆவது பாடசாலை தினம்  சிறப்பாக நினைவு கூறப்பட்டது. 

பழைய மாணவர்கள்,கல்லூரி அபிவிருத்தி சங்கம் மற்றும் கல்லூரி நிர்வாகம் என்பனவற்றால் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வானது கல்லூரி அதிபர் ரி.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.1945 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் அமரர் நல்லையா மாஸ்ரர் என்பவரால் இவ் கல்லூரி பிரதேச மாணவர்களின் நன்மை கருதி ஆரம்பித்து  வைக்கப்பட்டது.

'எம் வாழ்வில் அணையா தீபமாய் கல்விச் சுடரேற்றிய குருகுலமே'   எம் எதிர்காலச் சமூகத்தின் விடியலுக்காய் உம்மை சிரம் தாழ்த்திக் கரம் கூப்பி வணங்குகிறோம் என்ற தொணிப் பொருளில் இன்றைய நிகழ்வுகள் யாவும் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 நிகழ்வில் முதன் நிகழ்வாக அதிதிகள் மலர் மாலை அணிவித்து பாண்டு வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டனர்.

கல்லூரி கொடியானது அதிபரினால் ஏற்றப்பட்டு கல்லூரி கீதம் இசைக்கப்பட்டது.பின்னர் கல்லூரி வளவினுள் அமைக்கப்பட்ட முற் பெரும் தேவிகளில் ஒருவரான சரஸ்வதி தேவிக்கு விசேட பூசைகள் நடைபெற்று அதிதிகளால் தீபம் ஏற்றப்பட்டு,கல்லூரியின் ஸ்த்தாபகர் அமரர் நல்லையாவின் உருவ சிலைக்கு  மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் நல்லையா கீதம் இசைக்கப்பட்டது.

நிகழ்வுகள் யாவும் மங்கள விளக்கேற்றலுடன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 நிகழ்வில் கல்லூரி வரலாற்றில் கல்லூரிக்கு பல வழிகளிலும் சேவையாற்றி பங்களிப்பு செய்த முன்னாள் அதிபர்களின் சேவைகளை பாராட்டி நினைவுச் சின்னங்ள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.தேசிய மட்டத்தில் உயர் சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்,கல்விப் பொதுத்தர சாதாரணம் மற்றும் உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டு சாண்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விசேட பரிசளிப்பு நிகழ்வாக 'முத்துக்கள் செல்வங்கள் விருது'  வழங்கப்பட்டது.இவ் விருதானது மாணவர்களின் ஒழுக்கங்களை பாராட்டியும் மாணவர்கள் தமது நற்பெயரை பேணும் முகமாக ஏனைய மாணவர்களில் முன்னுதாரணமாக திகழும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் திறமையினை பாராட்டும் முகமாக இவ் விருது வழங்கப்பட்டது.அத்துடன் பழைய மாணவர்களின் பங்களிப்பில் பாடசாலை இலச்சினை மற்றும் நல்லையா கீதம் இசை என்பன வெளிடப்பட்டன.

தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி பாதனிகள்,நூலகத்திற்கான ஒரு தொகுதி நூல்கள்,வறுமையில் நிலையில் கல்வி கற்க முடியாமல் உள்ள மாணவர்களின் எதிர்கால கல்விற்கான நிதி உதவி என பல்வேறு பாடசாலை மட்ட தேவைகளை மையப்படுத்தியதான உதவிகள் இதன்போது கல்லூரியில் கல்வி கற்ற முன்னாள் மாணவர் பரிவுகளினால் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரனமாக செயற்படும் வண்ணம் பல்வேறுபட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் அதிபர்கள்,பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஆரையம்பதி உயர் தொழில் நுட்பக் கல்லூரி பணிப்பாளர் செ.ஜெயபாலன் என்போர் கலந்து கொண்டனர்.










Post a Comment

0 Comments