செய்தியாளர் - ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தினால் மட்டக்களப்பு - வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் 41 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் முனைவோருக்கான உதவு ஊக்கத் தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சைல்ட் பண்ட் நிறுவனம் மற்றும் அக்ஷன் யுனிற்றி லங்கா ஆகிய நிறுவனங்களின் அனுசரணையில் வாழ்ககைப்படி நிலை 3 எனும் செயல் திட்டம் வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் அமுலாகிறது.
ஒருங்கிணைந்த பல்வேறு திட்ட அமுலாக்கங்களுக்குள் உள்வாங்கப்பட்ட இளைஞர் யுவதிகளில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்திச் செயல்பட்ட முன்னோடி இளைஞர்களைப் பாராட்டி ஊக்குவித்து உதவியளிக்கும் நிகழ்வில் இந்த இளைஞர் யுவதிகள் 41 பேருக்கும் தலா 30 ஆயிரம் ரூபாய்க்குரிய காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
“மாற்றத்தின் முகவர் நாமே” எனும் தொனிப் பொருளில் முன்னோடி இளைஞர் யுவதிகளைக் கௌரவித்து உதவி ஊக்கமளிக்கும் நிகழ்வு அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி கே. கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக உதவிச் செயலாளர் சுபா சதாகரனின் பங்குபற்றலுடன் வவுணதீவுப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதேச செயலகம் மற்றும் பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள் உட்பட நிறுவன அலுவலர்களான இயக்குநர் சபைத் தலைவர் ஜீ. மகேஸ்வரி, செயலாளர் கே. சத்தியநாதன், நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் வி. சுதர்ஷன், திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன் உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்களும் பிரதேச பொது மக்களும் இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments
tamil makal kural